சார்ஜா-வேலை போனதால் 2 இந்தியர்கள் தற்கொலை
சார்ஜா: வேலையிலிருந்து நீக்கப்பட்ட செய்தியால் மனமுடைந்த இரண்டு இந்திய தொழிலாளர்கள் சார்ஜாவில் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த இருவரும் சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர். தற்போது பணி வாய்ப்புகள் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் அந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடந்துள்ளது.
அந்த நிறுவனம் இந்த இரண்டு இந்திய இளைஞர்களையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. தற்போது நாடு திரும்புமாறும், பின்பு நிலைமை மாறியதும் அவர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி அந்த இரண்டு இளைஞர்களும் தங்களது அறைகளில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையறிந்த சக தொழிலாளர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த இளைஞர்களின் பெயர், ஊர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.