மும்பை தாக்குதல்-தீவிரவாதிகள் பயன்படுத்திய சீன மொபைல்கள்
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 180 பேர் வரை பலியானார்கள்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 9 பேரை சுட்டுகொன்ற போலீசார் அஜ்மல் கசாப் என்பவனை மட்டும் உயிரோடு பிடித்துள்ளனர். இதன்மூலம் இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை இந்திய அரசு உறுதிபடுத்தியுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானில் இருக்கும் சில தீவிரவாதிகளை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பை உறுதிபடுத்த இன்னொரு ஆதாரமும் சிக்கியுள்ளது. அது இறந்து போன தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஐந்து நோகியா மொபைல் போன்கள்.
இந்த மொபைல் போன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள யுனைடெட் மொபைல் மற்றும் டுவல்வ் பாகிஸ்தான் நிறுவனங்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை நோகியா நிறுவனத்தின் அமுலாக்க பிரிவு மானேஜர் தனது வாக்குமூலத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.
அவர் இன்று இது குறித்து அமெரிக்காவிலுள்ள எப்.பி.ஐ அலுவலகத்தில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அவர் வாக்குமூலம் கொடுத்தார்.
அதில், சர்வதேச மொபைல் அடையாள எண்ணை கொண்டு எந்தவொரு நோகியோ போனின் வரலாற்றையும் எளிதாக சொல்லிவிடலாம். இந்த ஐந்து மொபைல்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டு பாகிஸ்தானில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.