ராஜபக்சே மருமகன் தான்சானியாவில் மர்ம சாவு!
அருசா (தான்சானியா): இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மருமகன் ஷியாம்லால் ராஜபக்சே இன்று தான்சானியாவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அது இயற்கை மரணமா அல்லது கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபக்சேவின் மாமனாரும், இலங்கை சுதந்திர கட்சி நிறுவனருமான டான் ஆல்வின் ராஜபக்சேவின் பேரன் ஷியாம்லால் ராஜபக்சே. 42 வயதான ஷியாம்லால் தற்போது தான்சானியாவில் ரூவாண்ட இன படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சர்வதேச தீர்ப்பாணையம் ஒன்றில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
அவர் அருசா நகரில் தனது மனைவி பிரசாந்தியுடன் வசித்து வந்தார். இந் நிலையில் நேற்று ஷியாம்லால் தனது வீட்டில் மூக்கில் ரத்த வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் அவர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அப்பகுதி போலீஸ் கமாண்டர் பசிலியோ மாடேய் இதை மறுத்துள்ளார். அவர் கூறகையில், ஷியாம்லால் நேற்று இரவு விருந்தினர்களுடன் பேசி கொண்டிருந்த போது நன்றாக இருந்துள்ளார். அவரை கொள்ளையர்கள் தாக்கியதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்காக காத்திருக்கிறோம் என்றார்.
தான்சானியாவில் இலங்கையின் தூதரகம் இல்லாததால் அருகில் இருக்கும் கென்யாவுக்கான இலங்கை தூதரிடம் இந்த விஷயத்தை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.