சென்னையில் சைபர் கிரைம் ஆய்வகம்!
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரூ.70 லட்சம் செலவில் சைபர் கிரைம் பிரிவு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கமிஷனர் ராஜேந்திரன் இன்று திறந்து வைத்து நிருபர்களிடம் பேசுகையில்,
செல்போன் திருடுபவர்கள் புகார் குறித்து பற்றி எப்ஐஆர், சிஎஸ்ஆர் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு எப்ஐஆர் கொடுக்கப்படவில்லை என்றால் எஸ்எம்எஸ் மூலம் புகார் தெரிவித்தால் உங்கள் இல்லங்கள் தேடி எப்ஐஆர் காப்பி வரும்.
இங்கு திருடப்படும் செல்போன்கள் நேபாளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் மூலம் கணினி வழி குற்றங்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
வங்கிகள்- நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றும் 'ஒயிட் காலர்' மோசடிப் பேர்வழிகள் சுமார் 500 பேர் சென்னையில் நடமாடி வருகின்றனர். இதில் 489 'ஒயிட் காலர்' குற்றவாளிகளின் போட்டோ ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து இந்த மோசடி பேர்வழிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இவர்களின் போட்டோக்கள் போலீஸ் வெப்சைட்டிலும் வெளியிடப்படும் என்றார்.
இந்த சைபர் கிரைம் பிரிவு ஆய்வகத்தில் தற்போது 3 இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 4 தொழில்நுட்ப சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.