நாஸ்டாக்கில் ஒளிர்ந்த மூவர்ணக் கொடி!
நியூயார்க்: இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதத்தில் அமெரிக்காவின் பங்குச் சந்தையான நாஸ்டாக் எலெக்ட்ரானிக் போர்டில் இந்தியாவின் மூவர்ணக் கொடி நிறம் ஒளிர வைக்கப்பட்டது. பங்குச் சந்தையின் வர்த்தக நேர முடிவில் இறுதி மணி ஒலிப்பு நிகழ்ச்சியில் இந்திய தூதர் பிரபு தயாள் கவுவிக்கப்பட்டார்.
மன்ஹாட்டனில் உள்ள நாஸ்டாக் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
உலகின் முதல்நிலை பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் நடந்த இந்த நிகழ்ச்சி, இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் பெற்று வரும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாக உள்ளது.
'நவீன இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் இந்த நிகழ்ச்சி மிக முக்கியமான ஒன்று. இந்தியாவின் பிரிக்க முடியாத பொருளாதாரத் துணைவன் அமெரிக்கா என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சி இது' என்றார் பிரபு தயாள்.
இந்த நிகழ்ச்சி நடந்த போது நாஸ்டாக் அமைந்துள்ள டைம் சதுக்கத்தில் உள்ள எலெக்ட்ரானிக் போர்டில் இந்தியாவின் தேசியக் கொடி ஒளிர்ந்த வண்ணமிருந்தது.