மக்களிடம் குறைகேட்க கமிஷ்னர்கள்- எஸ்பிக்களுக்கு உத்தரவு!
சென்னை: வரும் 1ம் தேதி முதல் பொது மக்களிடம் காவல்துறை எஸ்பிக்களும் கமிஷ்னர்களும் மாதத்தில் 2 நாட்கள் குறை கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 13ம் தேதி பொது மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் திங்கட்கிழமைகளில் மாநகரக் காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மூலம் குறை கேட்கும் நாள் கடைபிடிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் முகமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் துறையில் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது திங்கட்கிழமைகளில் பொதுமக்களிடம் குறை கேட்கும் நாள் கடைப்பிடிக்கப்படும்.
அந்நாளில், அந்தந்த மாநகரக்காவல் ஆணையாளர்கள் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் தலைமையிடத்தில் தங்கி, பொது மக்களைச் சந்தித்து, அவர்கள் அளிக்கும் விண்ணப்பங்களைப் பெறுவதுடன், அவர்களுக்கு ஒப்புகைக் கடிதம் வழங்கி, அவர்கள் கூறும் குறைபாடுகளை உடனடியாகக் களைவதற்காக விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் குறை கேட்கும் நாள் திட்டம் தமிழகக் காவல் துறையில் 1.9.2009 முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.