பாலஸ்தீன மசூதியில் துப்பாக்கி சண்டை-22 பேர் பலி
காஸா பகுதி ஹமாஸ் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இங்குள்ள ரபா நகரி்ல் உள்ள இப்ன் தைமியா என்ற மசூதியில் ஆயுதம் தாங்கிய தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஜுன்த் அன்சர் அல்லா அமைப்பின் தலைவரான ஷேக் அப்துல் லததீப் மூசா, காஸா பகுதியில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமலாக்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து அவர்களுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மூசாவின் ஆதரவாளர்கள் 15 பேரும் ஹமாசின் போலீஸ் பிரிவைச் சேர்ந்த 6 பேரும் ஒரு சிறுமியும் கொல்லப்பட்டனர். மேலம் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சண்டையில் மூசா தப்பியோடிவிட்டார். ஆனால், இன்று காலையில் கொல்லப்பட்டுவிட்டார். அவர் அணிந்திருந்த வெடிகுண்டு பெல்ட் வெடித்து அவர் இறந்ததாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஹமாஸ் தாக்குதலில் அவரது பெல்ட் குண்டு வெடித்ததா என்று தெரியவில்லை.
இந் நிலையில் மூசாவின் ஆதரவாளர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அங்கு சுதந்திரமான மத சட்டத்தை அமலாக்கி வருகிறது. இதனால் மக்கள் மதக் கட்டுபாடுகள் அதிகம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், அங்கு ஷரியா சட்டததை அமலாக்க வேண்டும் என்றும் இன்டர்நெட் மையங்களை மூட வேண்டும் என்றும் ஜுன்த் அன்சர் போன்ற அமைப்புகள் கோரி வருகின்றனர். இவர்களுக்கு அல்-கொய்தாவி்ன் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.