அடுத்த இரு மாதங்களில் மேலும் வட்டி குறையும்!
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பது போல அமையாவிட்டால் அடுத்த இரு மாதங்களுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்க மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்திய அரசு வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை ஓரளவு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
ஆனால் தங்களது முதன்மை வட்டி விகிதத்தை மட்டும் குறைக்காமல் பார்த்துக் கொண்டன.
இதனால் எல்லா வங்கிகளிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் உபரியாகத் தேங்கிக் கிடக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வரை, மத்திய ரிசர்வ் வங்கியில் உள்ள அரசு வங்கிகளின் உபரித் தொகை ரூ. 1, 46, 470 கோடி ரூபாய்.
கடன் வழங்குவதில் வணிக வங்கிகள் காட்டும் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளால், கடன் வழங்கும் அளவு கணிசமாகக் குறைந்துவிட்டது.கடந்த ஆண்டை விட இப்போது கிட்டத்தட்ட இருமடங்கு தொகை உபரி நிதியாக உள்ளது.
இதனால் உடனடியாக வட்டி விகிதங்களைக் குறைத்து, கெடுபிடிகளைத் தளர்த்தி கடன் வழங்கலைத் துரிதப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வரும் அக்டோபர் மாதம் வரை இதே நிலை நீடித்தால் வங்கிகளின் கையிருப்பில் உள்ள ரொக்கம் கணிசமாக உயர்ந்துவிடும். எனவே பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறாமல் இப்போதுள்ளது போன்றே இருந்தால், நிச்சயம் வங்கிகளின் முதன்மை கடன் வழங்கல் வட்டி விகிதம் குறைக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.