திருத்தணியில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடி கிருத்திகை திருவிழா மிகவும் பிரசித்தம் பெற்றது. கடந்த 12ம் தேதி ஆடி பரணியுடன் துவக்கிய இந்த திருவிழா நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று முன்தினம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி கிருத்திகை கொண்டாடப்பட்டது. மாலையில் நடந்த தெப்பத்திருவிழாவில் உற்சவ மூர்த்தி சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதம் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், தீப ஆராதனை மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சுவாமி, சரவண பொய்கையை மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்தார்.
இந்நிகழ்ச்சியை காண தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்றனர்.