'ஜெயலலிதா பேரவையை' பலப்படுத்தும் ஜெயலலிதா
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் கொட நாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அதில், ஜெயலலிதா பேரவை அமைப்பை பலப்படுத்துமாறும், அந்த அமைப்பில் அதிக அளவில் இளைஞர்களைச் சேர்க்குமாறும் ஜெயலிலதா உத்தரவிட்டார்.
தேர்தல் தோல்விக்குப் பின் கடந்த 3 மாதங்களாக கொடநாடு எஸ்டேட்டில் தங்கியுள்ள ஜெயலலிதா அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளை அடிக்கடி அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந் நிலையில் நேற்று தலைமைக் கழக நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பித்துரை, வளர்மதி, 45 மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், இடைத் தேர்தல் குறித்தும் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
அதிமுக கிளைக் கழகங்கள் மற்றும் பேரூராட்சி, நகராட்சி, ஒன்றியம், மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் தேர்தல் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தத் தேர்தல் சுமார் 2 மாதங்கள் வரை நடைபெறுவுள்ளது. இந்தத் தேர்தல் குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
ஜெயலலிதா பேரவைக்கு மாவட்டம், பகுதி, ஒன்றிய அளவில் மட்டுமே தற்போது நிர்வாகிகள் உள்ளனர். இனிமேல் கிளைக்கழகம் மற்றும் வார்டுகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த நிர்வாகிகள் 30 வயது முதல் 40 வயதுக்குள் தான் இருக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறினார்.
ஏற்கெனவே அதிமுகவில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை அமைப்புகளை தொடங்கிய ஜெயலலிதா அதில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க உத்தரவிட்டார்.
இந் நிலையில் ஜெயலலிதா பேரவையிலும் இளைஞர்கள், இளம் பெண்களை சேர்த்து அதை பலப்படுத்த ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.