நெல்லை வாலிபருக்கு பன்றி காய்ச்சல் இல்லை
நெல்லை: நெல்லையில் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் சேர்க்கப்பட்ட வாலிபருக்கு பன்றி காய்ச்சல் நோய் இல்லை என நெல்லை சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரான் மைதீன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
பன்றி காய்ச்சலுக்குரிய ஆயிரம் டாமிப்ளு மாத்திரைகள் சென்னையில் இருந்து நேற்று நெல்லை வந்துள்ளன. தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த மாத்திரைகள் வழங்கப்படும்.
பன்றிக்காய்ச்சல் அறிகுறி கொண்ட 8 பேரின் சளி, ரத்தம் பரிசோதனைக்காக சமீபத்தில் சென்னை கிங் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டது.
அதில் மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த பேச்சி்முத்துவின் சோதனை முடிவு மட்டும் வந்துள்ளது. அதில் அவருக்கு பன்றி காய்ச்சல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 7 பேரின் சோதனை முடிவு இன்னும் ஒரு சில நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம்.
நாளை முதல் ரயில் நிலையத்தில் சோதனை...
நாளை தேதி முதல் நெல்லை ரயில் நிலையத்தில் 2 டாக்டர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் மும்பையில் இருந்து வரு்ம் பயணிகளுக்கு பன்றி காய்ச்சல் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்துவார்கள் என்றார்.