அதிகரிக்கும் ஏற்றுமதி - சுறுசுறுப்படையும் திருப்பூர்
திருப்பூர்: திருப்பூரில் மீண்டும் பனியன் வர்த்தகம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்கு கிடைக்கும் ஏற்றுமதி ஆர்டர்கள் ஓரளவு அதிகரிக்கத் துவங்கிவிட்டதால் மீண்டும் பரபரப்பான உற்பத்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர் உற்பத்தியாளர்கள்.
1985-ம் ஆண்டு 15 கோடியாக மட்டுமிருந்த பனியன் ஏற்றுமதி வர்த்தகம், இன்று ரூ.15000 கோடியைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. ஆனால் அமெரிக்க பொருலாதார வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைவு போன்றவை திருப்பூர் பனியன் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியைப் பெருமளவு பாதித்தது.
ஏற்றுமதியும் குறையத் துவங்க, எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் தொழிற்கூடங்கள் டல்லடித்தன.
இந்த நிலையில் இப்போது மீண்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கணிசமான ஏற்றுமதி ஆர்டர்களை திருப்பூர் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த ஆர்டர்கள் இனியும் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது உற்பத்தியாளர்களுக்கு. மேலும் காட்டன் துணிகளுக்குப் பயன்படுத்தும் நூல் விலையும் சீரடையத் துவங்கிவிட்டது.
எனவே மீண்டும் பரபரப்பாக உற்பத்தியைத் துவங்கிவிட்டன திருப்பூர் தொழிற்சாலைகள்.