புதிய தாக்குதலுக்கு தாக்குதலுக்கு தயாராகும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்- பிரதமர் எச்சரிக்கை
டெல்லி: பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள், இந்தியாவில் புதிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்கள். எனவே நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில், இன்று உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
மாநாட்டின் தொடக்கத்தில் அவர் ஆற்றிய உரையின்போது, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குவுக்கள், இந்தியா மீது புதிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வருவதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன.
எல்லை கடந்த தீவிரவாதம் இந்தியாவுக்கு எப்போதுமே மிரட்டலாக உள்ளது. நமது பாதுகாப்புப் படையினர் எத்தகைய சவால்களையும், சமாளிக்கும் வகையில் உள்ளனர். தீவிரவாத மிரட்டலாக இருந்தாலும் சரி, தாக்குதலாக இருந்தாலும் சரி அதை சமாளிக்க நமது பாதுகாப்புப் படையினர் எப்போதும் விழிப்புணர்வுடன் உள்ளனர்.
நமது நாட்டின் கடற் பிராந்தியம், மிகச் சிறந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் மட்டும் இருந்த பாதுகாப்பு வளையம் இன்று நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளது. இன்னும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைளை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரவாத தாக்குதல்களை சமாளிக்க அதி விரைவுப் படைகள் அமைக்கப்பட வேண்டும். மாநில சிறப்புப் போலீஸ் பிரிவுகள், உளவுப் பிரிவுகள் பலப்படுத்தப்பட வேண்டும்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சியின் செயல்பாடு வெற்றிகரமாக அமைய அனைத்து முதல்வர்களும் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
தீவிரவாத தாக்குதல் போன்ற நெருக்கடிகளை சமாளிக்கவும், தீவிரவாதிகளை ஒடுக்கவும் சென்னை, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் என்.எஸ்.ஜி. முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதப் பிரச்சினையைப் போலவே நக்சலைட் பிரச்சினையும் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது என்றார் பிரதமர்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பல்வேறு மாநில முதல்வர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.