முன்கூட்டியே அதிபர் தேர்தல்-ராஜபக்சே திட்டம்
கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான போர் வெற்றி சிங்களர்களின் மனதை விட்டு நீங்கும் முன்பாக அதிபர் தேர்தலை நடத்திவிட அந்நாட்டு அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இதன்மூலம் எளிதாக வெற்றி பெற முடியும் என அவர் திட்டமிட்டுள்ளார்.
இலங்கையின் அதிபராக கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி ராஜபக்சே பதவியேற்றார். விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குழி தோண்டி புதைத்தார்.
இதை தொடர்ந்து கடந்த மே மாதம் விடுதலை புலிகள் இயக்கத்தை முற்றிலும் அழித்துவிட்டதாக இலங்கை கூறியது. இதையடுத்து நாடு முழுவதும் சிங்களர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவரது பதவிக்காலம் 2011 நவம்பர் வரை இருந்தாலும் தற்போது தேர்தலை நடத்தினால் எளிதாக வெற்றி பெறலாம் என்பதால் அவசரம் அவசரமாக அதிபர் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி அதிபராக இருப்பவர் பதவியேற்று நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் தான் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், ராஜபக்சே பதவியேற்று தற்போது 3 ஆண்டுகள் 9 மாதங்களும் தான் முடிந்துள்ளது. வரும் நவம்பருடன் தான் அவரது 4 ஆண்டு பதவிக்காலம் முடிகிறது.
இதையடுத்து வரும் டிசம்பர் அல்லது அடுத்து ஆண்டு ஜனவரியில் அதிபர் தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது.
அதிபர் தேர்தலில் விடுதலை புலிகளின் ஆதரவு கட்சியான தமிழர் தேசிய கூட்டமைப்பும் போட்டியிட இருக்கிறது. அவர்கள் போட்டியிடும் பட்சத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை பெறும், அது ராஜபக்சேவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
தமிழர் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடாமல் எதிர்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்தால் ராஜபக்சேவின் வெற்றி கேள்வி குறியாகும் என இலங்கை அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.