ஸ்வைன் ப்ளூ 'மாஸ்க்'குடன் அதிமுக போராட்டம்!
சென்னை: பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுகிறது, இதனை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார். ஆனால் தமிழக அரசு பன்றிக் காய்ச்சல் நோய் இல்லை, போதுமான மாத்திரைகள் இருக்கிறது. காய்ச்சல் இருக்கிறதா என்று சோதனை நடத்தப்படுகிறது, யாரும் பீதி அடைய வேண்டாம் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுகிறது என்று பிரதமரும், குடியரசுத் தலைவரும் கூட அறிவித்திருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இந்த நோயை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த நோய்க்கு தண்டையார்பேட்டை மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாம்பரத்தில் ஒருவருக்கு இந்த நோய் வந்தால் அவரை தண்டையார்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்குள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழ்நாடு முழுவதும் 6 இடத்தில் இந்த நோய்க்கான ரத்த பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது திருச்சி வரை தான் உள்ளது. கன்னியாகுமரியில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டால் அவரை திருச்சி அல்லது சென்னைக்கு தான் கொண்டுவர வேண்டுமா?
பன்றிக் காய்ச்சல் நோய் பரவிய 4-வது நாடான மெக்சிகோ இன்று பன்றிக் காய்ச்சலை தடுத்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு இன்னும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதற்காக தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். பன்றிக் காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும் என்றார்.
போராட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். வளர்மதி உள்ளிட்டோர் பச்சை நிற முகக் கவசம் அணிந்திருந்தனர்.