உதவியாளர்களின் ஊழல்-பதவியிழக்கும் ஆளுநர்
அஸ்ஸாம் ஆளுநராக தற்போது இருக்கும் ரஸி முன்பு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தார். அப்போது இவரது உதவியாளர்களாக இருந்த ராஜேஷ் தாக்கூர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி அவினாஷ் குமார் ஆகியோர்,
இடமாற்றம், பதவி நியமனம் உள்ளிட்டவற்றில் தலையிட்டு பெருமளவில் பணம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு காரியம் சாதித்ததாக புகார் எழுந்தது.
மேலும், இருவரும் பெருமளவில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள 34வது தேசிய விளையாட்டுப் போட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் இவர்கள் பெருமளவில் மோசடி செய்து சுருட்டியுள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்வடர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அவர்கள் செய்த முறைகேடுகள் உண்மைதான் என்று தெரிய வந்தது.
இதையடுத்து ரஸியை ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் டெல்லி வந்திருந்த ரஸி, பிரதமரை சந்தித்தார். அப்போது ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அவரைக் கேட்டுக் கொண்டார். மேலும், உடல் நலனைக் காரணம் காட்டி ராஜினாமா செய்யுமாறும் அவரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டாராம். ஊழலுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தால் மத்திய கூட்டணி அரசுக்கு பெயர் கெட்டுப் போய் விடும் என்பதால் இந்த அறிவுரையை தெரிவித்துள்ளார் பிரதமர் என்று தெரிகிறது.
பிரதமரின் உத்தரவை ஏற்க முதலில் ரஸி மறுத்துள்ளார். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற தனது உத்தரவில் உறுதியாக இருந்ததால் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க கால அவகாசம் கேட்டுள்ளாராம் ரஸி.
யார் இந்த ரஸி...
ரஸி தீவிர காங்கிரஸ்காரர். 1969ம் ஆண்டு உ.பி. இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 71ல் இளைஞர் காங்கிரஸ் தலைவரானார். 73 வரை அப்பதவியில் நீடித்தார்.
1980 முதல் 85 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். பின்னர் 1988 முதல் 98 வரை மீண்டும் ராஜ்யசபா உறுப்பினரானார்.
கடந்த 2005ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது ஒரு சர்ச்சையில் சிக்கினார். அப்போது சட்டசபையில் பாதிக்கும் மேற்பட்ட சீட்களை வென்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் காங்கிரஸ் ஆதரவுடன் சொற்ப எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்திருந்த சிபு சோரனை ஆட்சியமைக்க அழைத்து சர்ச்சையில் சிக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் அப்போதைய குடியரசுத் தலைவர் கலாமை நேரில் சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து விளக்கம் அளிக்குமாறு ரஸிக்கு கலாம் உத்தரவிட்டார்.
இப்படி சர்ச்சையின் மறு உருவமாக திகழ்ந்த ரஸியை கடந்த ஜூலை 18ம் தேதி அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றியது காங்கிரஸ் கூட்டணி அரசு.