டெல்லி-பாட்னா ரயிலுக்கு தீ- 2 பெட்டிகள் எரிந்தன
பாட்னா: டெல்லி-பாட்னா இடையே ஓடும் ரயிலுக்கு மாணவர்கள் சிலர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இரண்டு ஏசி ரயில் பெட்டிகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியது.
டெல்லியிலிருந்து பாட்னா நோக்கி வந்து கொண்டிருந்த சிரஞ்சீவி எக்ஸ்பிரஸ் இன்று காலை பிக்தா ரயில் நிலையத்தில் வந்து நின்றது. பாட்னாவில் இருந்து 30 கிமீ தூரத்தில் உள்ள இந்த ரயில் நிலையத்தில் இறங்கிய சில மாணவர்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளனர்.
மேலும் அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அவர் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் புகார் செய்தார்.
அந்த மாணவர்கள் போலீசாரிடம் வாய்த்தகராறு செய்துள்ளனர். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து கோபமடைந்த மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் நின்று கொண்டிருந்த ரயிலின் இரண்டு ஏசி பெட்டிகளை தீ வைத்து எரித்தனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.