நெல்லை மாணவருக்கு டெங்கு காய்ச்சல்
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் இலஞ்சியில் மாணவர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் சுகாதார துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம், இலஞ்சியிலுள்ள கோமதி நகரை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகன் சுரேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறான்.
இந்நிலையில் அந்த சிறுவன் கடந்த ஒரு வார காலமாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான். இதையடுத்து அவனது பெற்றோர்கள் அருகிலிருந்த மருத்துவமனைகளில் காட்டினர். ஆனால், காய்ச்சல் குணமடையவில்லை.
இதையடுத்து அந்த மாணவன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான். அப்போது அந்த மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மாணவனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இலஞ்சியில் இந்த நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறை தடுப்பு நடவடிக்கைகளை எடு்த்து வருகிறது. வல்லம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு மருந்துகளை வினியோகம் செய்து வருகிறது.