ரீடர்ஸ் டைஜஸ்ட் திவால்: பாதிப்பில்லை- எச்சிஎல்
ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்தின் திவால் அறிவிப்பால் அந்த நிறுவனத்துடனான தங்கள் ஒப்பந்தத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்துடன் 350 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏழு வருட அவுட்சேர்ஸிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது எச்சிஎல்.
இந்த திவால் அறிவிப்புக்கு முன்னதாகவே, தனது முக்கிய கடனாளர்களுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். அதன்படி, அமெரிக்க நீதிமன்ற மேற்பார்வையில் ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனம் மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். இதனால் பல நெருக்கடிகளிலிருந்து நிறுவனம் தப்பிக்கும். இதற்காகத்தான் திவால் அறிவிப்பை வெளியிடுகிறது ரீடர்ஸ் டைஜஸ்ட்.
மேலும் இந்த திவால் அறிவிப்பு ரீடர்ஸ் டைஜஸ்டின் அமெரிக்க பிரிவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் இந்திய சப்ளையரான தங்களை பாதிக்காது என்றும் எச்சிஎல் அறிவித்துள்ளது.
ரீடர்ஸ் டைஸ்டின் 45 நாட்டு கிளைகளில் 14 மொழிகளுக்கான ஐடி கட்டமைப்புப் பணிகள், இயக்க மேம்பாடு உள்ளிட்டவற்றின் அவுட்சோர்ஸிங்கை எச்சிஎல் கவனித்து வருகிறது.