ராணுவத் தளபதி கபூர் மீது அதிகாரிகள் அதிருப்தி
டெல்லி: ராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூர் கடைப்பிடித்து வரும் சில செயல்பாடுகளால் அவருக்குக் கீழ் உள்ள உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனராம். தலைமைத் தளபதிக்கும், பிற தளபதிகளுக்கும் இடையிலான இந்தப் பனிப் போரால், பாதுகாப்புத்துறை கவலை அடைந்துள்ளது.
பதவி உயர்வு தொடர்பாக தீபக் கபூர் கடைப்பிடித்து வரும் வழிமுறைகள் அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகளை கடும் அப்செட் ஆக்கியுள்ளனவாம். அவரது செயல்பாடுகளால் தொழில் முறையிலான அணுகுமுறைகள் பாதிக்கப்பட்டு பாரபட்சமான செயல்பாடுகளே அதிகரிக்கும் என அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ராணுவத் தளபதி மேற்கொண்ட சில மாற்றங்களை வெளிப்படையாக கண்டித்தும், கேள்வி கேட்டும் 3 மூத்த லெப்டினென்ட் ஜெனரல்கள் கபூருக்கு கடிதமும் எழுதியுள்ளதால் நிலைமை மோசமடைந்துள்ளது.
தீபக் கபூர் மீதான இந்த அதிருப்திக்கு இரண்டு நிகழ்வுகள் காரணமாக கூறப்படுகிறது. ஒன்று - முன்னாள் தளபதி சுந்தர்ஜி பதவிக்காலத்தில் கூறிய யோசனை. அதாவது மூத்த அதிகாரிகளை ஸ்டாஃப் மற்றும் கமாண்ட் என இரு பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என சுந்தர்ஜி கூறியிருந்தார். ஸ்டாஃப் பிரிவின் கீழ் வரும் அதிகாரிகள், நிர்வாக மற்றும் பணியாளர்கள் குறித்து மட்டும் கவனிப்பார்கள். கமாண்ட் பிரிவின் கீழ் வருவோர் படைகள் மற்றும் படைப் பிரிவுகளின் செயல்பாடுகளை கவனிப்பார்கள். இந்த யோசனையை தற்போது தீபக் கபூர் அமல்படுத்த முனைந்துள்ளார். இப்படிச் செய்வதால், லெப்டினென்ட் மற்றும் மேஜர் ஜெனரல் பதவிகளில் இருப்பவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்பது அதிகாரிகளின் கவலை.
இந்தாண்டு ஜனவரி மாதம், பதவி உயர்வுக்கான குழுவில் தீபக் கபூர் மற்றும் எட்டு ராணுவ கமாண்டர்கள் சேர்க்கப்பட்டனர். இந்தக் குழு, 15 மேஜர் ஜெனரல்களுக்கு லெப்டினென்ட் ஜெனரல் பதவி உயர்வைப் பரிந்துரைத்தது.
பரிந்துரைப் பட்டியலை பாதுகாப்புத் துறைக்கு அனுப்பியபோது இவர்களை ஸ்டாப் (10 பேர்) மற்றும் கமாண்ட் (5 பேர்) பிரிவுகளாகப் பிரித்து அனுப்பினார் தீபக் கபூர். ஆனால் கபூரின் இந்த நடவடிக்கைக்கு பதவி உயர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கபூருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகளின் வலியுறுத்தலின் பேரில் இப்படி மாற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்துக் கொண்டு இவற்றை நடைமுறைப்படுத்த கபூர் ஒப்புக் கொண்டாராம்.
இந்த நிலையில், பதவி உயர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த மூன்று அதிகாரிகள் கபூரின் முடிவை ஆட்சேபித்து அவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த விவகாரத்தால் பாதுகாப்புத்துறையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சுந்தர்ஜி இந்த ஐடியாவை முதன் முதலாக தெரிவித்தபோதே அதை பாதுகாப்புத்துறை ஆட்சேபித்துள்ளது. இதனால் அந்த முடிவுக்கு பாதுகாப்புத்துறை இதுவரை ஒப்புதல் தராமல் இன்னும் நிலுவையில் உள்ளதாம். அதேசமயம், ஃபைலை இன்னும் பாதுகாப்புத்துறை மூடாமல் வைத்துள்ளது. இதுதான் தீபக் கபூர், அதை மீண்டும் அமல்படுத்த முனைந்ததற்குக் காரணம் என்கிறார்கள்.
இந்தப் பொறுப்புப் பிரிவினைக்கு அதிகாரிகள் ஆட்சேபிப்பதற்குக் காரணம், ராணுவத்தினரின் வருடாந்திர ரகசிய அறிக்கையில், அவர்களின் மெரிட் ரேங்க்தான் பதவி உயர்வுக்கான அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படும். மேலும், பெற்ற விருதுகள், எந்தெந்த படைப் பிரிவுகளில் பொறுப்பு வகித்தார்கள் என்பதும் கணக்கில் கொள்ளப்படும்.
பதவி உயர்வுக்கான காரணிகளில் 95 சதவீதம் இந்த காரணிகளாகத்தான் இருக்கும். மீதமுள்ள 5 சதவீதம், மூத்த அதிகாரிகள் கொடுக்கும் நன்மதிப்பு சான்றுகள் ஆகும்.
இதை மாற்றும் வகையில் உள்ளது தீபக் கபூரின் நடவடிக்கை என்பது படையினரின் அதிருப்திக்கு முக்கிய காரணம்.
தீபக் கபூரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, லெப்டினென்ட் ஜெனரல்களுக்கான பதவி உயர்வுக்கான குழு, மேஜர் ஜெனரல் பதவி உயர்வுக்கான குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் தீபக் கபூருடன் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளனராம்.
பாதுகாப்புத்துறை இந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தால்தான் சலசலப்பு அடங்கும், இல்லாவிட்டால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது.