பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் அதிரடி நீக்கம்
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு அத்வானி- அருண் ஜேட்லி- சுஷ்மா சுவராஜ் கோஷ்டி தான் காரணம் என்று ஜஸ்வந்த் சிங்- யஷ்வந்த் சின்ஹா- அருண் ஷோரி உள்ளிட்டோர் அடங்கிய கோஷ்டி வெளிப்படையாக கூறி வருகிறது.
இதையடுத்து கட்சியில் பெரும் மோதல் நடந்து வருகிறது.
மேலும் கட்சியின் தோல்விக்குக் காரணமாக முக்கிய தலைவர்கள் மீது நடவடிக்கை கோரி வரும் ஜஸ்வந்த் சிங், ராஜஸ்தானில் தோல்விக்குக் காரணமாக இருந்த அம் மாநில மு்ன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார்.
வசுந்தரா தீவிரமான அத்வானி ஆதரவாளார் ஆவார். கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஆதரவுடன் ராஜேவை சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியிருந்து நீக்க முயன்று வந்தார் ஜஸ்வந்த். இந்த விஷயத்தில் ராஜ்நாத்துக்கும் தனக்கு எதிராக இருப்பதால் நடுநிலை வகித்து வருகிறார் அத்வானி. இதனால் ராஜே பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கட்சிக்குள் மேலும் குழப்பத்தை உருவாக்கும் வகையில் முகம்மத் அலி ஜின்னாவைப் பாராட்டும் வகையில் ஒரு நூலை நேற்று வெளியிட்டார் ஜஸ்வந்த் சிங்.
அதில், நாடு பிளவுபட்டதற்கு ஜின்னா காரணமல்ல என்றும், அவர் தேசப் பற்றாளர் தான் என்றும், அவர் தனி நாடு கேட்டதற்கு காரணங்கள் வேறு என்றும் கூறியுள்ளார் ஜஸ்வந்த்.
அதுவும் கட்சியின் தோல்வி குறித்து சிம்லாவின் இன்று பாஜகவி்ன் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடக்கும் முதல் நாளில் தனது நூலை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் ஜஸ்வந்த் சிங்.
இந் நிலையில் இன்று பாஜக மூத்தத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று சிம்லாவில் தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இக் கூட்டத்தின் துவக்க நாளான இன்று ஜஸ்வந்த் சிங் பங்கேற்கவில்லை.
அவரை கூட்டத்துக்கு வர வேண்டாம் என்று அத்வானியின் சார்பாக ராஜ்நாத் சிங் கூறிவிட்டதால் அவர் வரவில்லை.
அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, நரேந்திர மோடி, எதியூரப்பா உள்ளிட்ட 25 பேர் மட்டும் பங்கேற்கும் இக் கூட்டத்திற்கு சில முக்கியத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை.
இக் கூட்டத்தை யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோர் புறக்கணித்துவிட்டனர்.
இந் நிலையில் இக் கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங்கை நீக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக இக் கூட்டத்தையொட்டி நேற்றிரவு அத்வான் கட்சித் தலைவர்களுக்கு டின்னர் பார்ட்டி தந்தார். ஆனால், சிம்லாவில் இருந்து கொண்டே இதை புறக்கணித்தார் ஜஸ்வந்த் சிங்.
அத்வானியும் மற்ற தலைவர்களும் மாநில அரசின் கெஸ்ட் ஹவுசான பீட்டர்ஹாப் விடுதியில் தங்கியிருக்க, ஜஸ்வந்த் சிங் ஓபாராய் சிசில் ஹோட்டலில் தங்கினார்.
இந் நிலையில் ஜஸ்வந்த் நீக்கப்பட்டுள்ளார்.
பிரச்சனைகளைத் தீர்க்கவும், தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கவும் கூட்டப்பட்ட கூட்டத்தில் புதிய பிரச்சனை வெடித்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் சென்ற அத்வானி ஜின்னாவைப் பாராட்டிப் பேசிய, ஆர்எஸ்எஸ், விஎச்பியின் கடும் எதிர்ப்பால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது நினைவுகூறத்தக்கது.
2 ராஜே ஆதரவாளர்கள் நீக்கம்..
இந் நிலையில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் ஆதரவு எம்எல்ஏக்கள் இருவரை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்துள்ளார் அம் மாநில பாஜக தலைவரான அருண் சதுர்வேதி. இவர் ராஜ்நாத் சிங்கின் ஆதரவாளர் ஆவார்.
சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியிவிலிருந்து ராஜேவை விலகுமாறு உத்தரவிட்டுள்ளது டெல்லி தலைமை. இதை ஏற்பதாக ராஜே அறிவித்தாலும் இன்னும் விலகவில்லை.
இந் நிலையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்களான ராஜேந்திரசிங் ரதோர், கியான் தியோ அகுஜா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளது ராஜ்நாத் சிங் கோஷ்டி.