பாக். எல்லையில் 25 கிலோ ஹெராயின் பறிமுதல்-ரூ. 125 கோடி மதிப்பு
குர்தாஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லை பகுதியில் ரூ. 125 கோடி மதிப்பு கொண்ட 25 கிலோ ஹெராயின் என்னும் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாகிஸ்தானுக்கும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்துக்கும் இடையே உள்ள 553 கிமீ நீள எல்லை பகுதியில் முள்வேலி அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், இதையும் மீறி அப்பகுதியில் சமீபகாலமாக போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
கடந்த 15ம் தேதி இப்பகுதியில் 2 கிலோ ஹெராயின்களை கடத்த முயன்ற 4 பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் கடந்த 17ம் தேதி 6 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த இரு சம்பவங்களை அடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து சுமார் 250 கிமீ தூரத்தில் இருக்கும் குர்தாஸ்பூரில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ரூ. 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். இது குறித்து பஞ்சாப் மாநில எல்லைப்புற டிஐஜி ஜகிர் சிங் கூறுகையில்,
எல்லையில் சந்தகேத்துக்கு இடமான நடமாட்டம் இருப்பதை உணர்ந்த நாங்கள் சோதனைகளை தீவிரப்படுத்தினோம். அப்போது ஒரு நபர் கையில் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்துவிட்டார்.
அந்த பையில் 25 கிலோ ஹெராயின் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 125 கோடி என்றார்.