பன்றி காய்ச்சல்-மகாராஷ்டிரா ரயில்களை சோதனையிடும் மேற்கு வங்கம்
கொல்கத்தா: தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருக்கிறதா என சோதனையிடும் முடிவுக்கு மேற்கு வங்க மாநிலமும் வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நேற்று மட்டும் 9 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து பன்றி காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்கு மேற்கு வங்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று ரயில்வே அதிகாரிகள், கொல்கத்தா துறைமுக நிர்வாகிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் பின்னர் மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் அசோக் மோகன் சக்ரபர்த்தி கூறுகையில்,
மகாராஷ்டிராவில் இருந்து வரும் ரயில்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எல்லைப்புற ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். பின்னர் பயணிகள் அனைவரும் சோதனையிட படுவார்கள். அவர்களில் காய்ச்சல், சளி போன்ற ஸ்வைன் அறிகுறி இருப்பவர்களுக்கு சிவப்பு அட்டையும், மற்றவர்களுக்கு பச்சை அட்டை கொடுக்கப்படும்.
அதன்பின்னர் ரயில் அங்கிருந்து புறப்படும். பின்னர் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இறங்கும் சிவப்பு அட்டை பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
தற்போது மும்பையில் இருந்து ஹவுராவுக்கு ஆறு ரயிலும், புனேவுக்கு ஒரு ரயிலும் செல்கிறது. இவற்றில் மூன்று தினசரி ரயில்கள்.