சென்னை-2 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை
சென்னை: சென்னையில் டாக்டர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கிரில் கொள்ளையர்கள் தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை, தி.நகர் மோதிலால் தெருவில் வசித்து வரும் டாக்டர் நரசிம்மன், சென்னை மருத்துவ கல்லூரி போரசிரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வத்சலா (66).
இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு இவர்களது வீட்டு கிரில்லை மெஷின் மூலம் சத்தமில்லாமல் அறுத்துவிட்டு கொள்ளை கும்பல் உள்ளே நுழைந்துள்ளது.
பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, 2 வைரம் பதித்த வளையல்கள், 2 வைர தோடு மற்றும் அவர்களின் வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றை திருடியது.
இந்நிலையில் வீட்டுக்குள் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்த நரசிம்மனும், அவரது மனைவியும் விளக்கை போட்டனர். அப்போது பீரோ இருக்கும் அறைக்குள் இருந்து மூன்று பேர் வெளியே ஓடுவதை கண்ட அவர்கள் கூச்சலிட்டனர். அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் தப்பிவிட்டது.
சௌகார்பேட்டையில் 8 பவுன் கொள்ளை...
மற்றொரு சம்பவம் சென்னை, சௌகார்பேட்டையில் நடந்துள்ளது. அப்பகுதியிலுள்ள கிருஷ்ணபட்டணம் தெருவை சேர்ந்த மதன்சிங் (36) என்பவர் தனது குடும்பத்தினரோடு, திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
நேற்று இரவு அவரது வீட்டு கதவை உடைத்து, பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளது ஒரு கும்பல்.