For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. பரிசுப் பொருள் வழக்கு - குற்றச்சாட்டு பதிவு செய்ய தேதி கோரும் சிபிஐ

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான பரிசுப் பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செங்கோட்டையன் 37 முறை வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பதால் அவர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்குமாறு கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இந்த வழக்கில் 37 முறை வாய்தா வாங்கி அசத்தியுள்ளார் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது.

1991-1996 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 1992 ஆம் ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு வெளிநாட்டில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் சுமார் 2 கோடி அளவுக்கு வங்கி டிமான்ட் டிராப்டுகள் பரிசுகளாக வந்தன.

ஜெயலலிதா முதல்வராக இருந்ததால், அரசு விதிப்படி, அந்த பரிசுத் தொகையை அரசு கருவூலத்தில் சேர்ப்பதற்கு பதிலாக தனது வங்கி கணக்கில் சேர்த்துக் கொண்டார். இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால் தமிழக அரசின் சிபிசிஐடி போலீஸ் 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குப்பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 வருடமாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு துணை போனதாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13ஆண்டு களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிபிஐ இன்று நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில்,

ஜெயலலிதாவுக்கு எதிரான பரிசுப் பொருள் வழக்கில் 31.07.1996ல் ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகிய மூவருக்கும் எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இதில் 14.09.1996ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட வர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதன் பின்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஜெயலலிதா விலக்கு பெற்றார்.

12.07.2007ல் இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகவில்லை. மீண்டும் 13.03.2008ல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப் பட்டது. அப்போதும் பதிவு செய்ய இயலவில்லை.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2வது எதிரி செங்கோட்டையன் குற்றப் பத்திரிகையின் நகலை தமிழில் வழங்க வேண்டும் என்று கேட்டும், குற்றப்பத்திரிகையின் நகல் தெளிவாக இல்லை என்று கூறியும் தனக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் அனுமதி வழங்கிய உத்தரவை கேட்டும் பல முறை மனு தாக்கல்செய்தார்.

இவ்வாறு 37 முறை மனு மீது மனுவாக தாக்கல் செய்து வாய்தா வாங்கி வந்துள்ளார். இதனால் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக வழக்கு ஆரம்ப கட்ட நிலையிலேயே உள்ளது. எனவே குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய ஒரு தேதியை நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும்.

வழக்கை விரைவாக நடத்தி முடிக்க குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி முகமது இசாத் அலி விசாரித்தார்.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் நவநீத கிருஷ்ணன், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையினை அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தோம். அதற்கு இதுவரை அந்த அறிவிப்பாணை அளிக்கப்படவில்லை. மேலும் சிபிஐ தாக்கல் செய்துள்ள இந்த மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்றார்.

இதையடுத்து நாளைக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X