ஸ்னேகா: ஹோட்டல் பில் கட்டாமல் சிறைக்கு போன ராகவேந்திரா!
குற்றாலம்: நடிகை ஸ்னேகாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும், கல்யாணம் செய்து கொள்ளுமாறு தொல்லை செய்தும் இப்போது கைதாகி கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் பெங்களூர் ராகவேந்திரா, ஏற்கனவே குற்றாலத்தில் ஹோட்டல் பில்லைக் கட்டாமல் மோசடி செய்ய முயன்று கைதாகி, ஒரு மாதம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
குற்றாலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி ராகவேந்திரா அறை எடுத்துத் தங்கியுள்ளார். ஹோட்டலுக்கான வாடகைக் கட்டணத்தை செலுத்த தனது கிரெடிட் கார்டைக் கொடுத்துள்ளார். பெரிய ஆள் போல என்று நினைத்த ஹோட்டல் நிர்வாகம், இதனால் ஹோட்டல் நிர்வாகம் முன்பணம் கேட்கவில்லை.
மார்ச் 7ம் தேதி வரை நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ராகவேந்திரா வெறும் ரூ.8,500 மட்டும் பணம் செலுத்தியுள்ளார். அதன்பின்னர் பாக்கி தொகையை செட்டில் செய்யாமல் ராகவேந்திரா எஸ்கேப் ஆகிவிட்டார்.
ராகவேந்திரா, ஹோட்டலுக்குத் தர வேண்டிய பாக்கித் தொகை ரூ.19,998 ஆகும். பணம் கொடுக்காமல் பார்ட்டி எஸ் ஆகி விட்டதால் ஹோட்டல் நிர்வாகம் டென்ஷன் ஆனது.
இந்நிலையில் மார்ச் 8ம் தேதி ஹோட்டல் மேலாளர் தங்கராஜ் குற்றாலம் பஸ் ஸ்டாண்டில் வைத்து ராகவேந்திராவை பார்த்துள்ளார். உடனே அவரை அணுகி பாக்கிப் பணத்தைக் கொடுக்காமல் எங்கே போய் வி்ட்டீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார் ராகவேந்திரா.
இதையடுத்து தங்கராஜ் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். ராகவேந்திரா மீது போலீசார் 294 பி, 420, 306(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது செங்கோட்டை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கோர்ட், ராகவேந்திராவுக்கு 35 நாள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.
இதையடுத்து மார்ச் 8ம் கேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் ராகவேந்திரா அடைக்கப்பட்டார்.
இதை வைத்துப் பார்க்கும்போது உண்மையிலேயே ராகேவந்திரா தொழிலதிபர்தானா, கோடீஸ்வரர்தானா என்ற சந்தேகம் எழுகிறது.
ராகவேந்திராவின் குற்றால லீலைகள் குறித்து நெல்லை மாவட்ட போலீசார், சென்னை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பணம் சுருட்ட ராகவேந்திரா திட்டம்?:
இந் நிலையில், ராகவேந்திரா சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டருடன் சேர்ந்து தென்காசி பகுதியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் பலகோடி ரூபாய் மோசடி செய்ய திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
ராகவேந்திரா குற்றாலத்தில் தங்கியிருந்த சமயத்தில் டாக்டர் மாயா என்னும் பெண் மருத்துவருடன் இணைந்து தென்காசி பகுதியி்ல் உள்ள அனைத்து மருத்துவர்கள், தொழிலதிபர்கள், நில உரி்மையாளர்கள் போன்றோரிடம் பல கோடி ரூபாய் சுருட்ட திட்டம் போட்டது அம்பலமாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள ஒரு நிறுவனம் 500 கோடி ரூபாய் முதலீட்டில் குற்றாலம் பகுதியில் மருத்துவ கல்லூரி, கேன்சர் மருத்துவமனை, சர்வதேச தரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆரம்பிக்க திட்டமிட்டுருப்பதாக தகவல் பரப்பினார். இதற்கு உள்ளூர் முதலீடு மற்றும் ஷேர் பெறுவதாக கூறி தென்காசி பகுதியில் பலரிடம் பணத்தை சுருட்ட மிகப்பெரிய அளவில் திட்டமிட்டுள்ளார். இதற்காக கவர்ச்சிக்கரமாக அழைப்பிதழ்கள் அடித்து ஒரூ மீட்டிங்கும் நடத்தியுள்ளார்.
இந்நிலையில்தான் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு பணம் கட்டாததால் ராகவேந்திரா குற்றாலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் கடையநல்லூர் வங்கியில் சமீபத்தில் 4.5 கோடி மோசடி நடத்தியது தொடர்பாக மாயாவும் அவரது கூட்டாளியான டாக்டர் வெங்கடேசும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.