காபூல் வங்கியில் தாலிபான்-போலீசார் துப்பாக்கி சண்டை
காபூல்: காபூல் வங்கிக்குள் நுழைந்த தாலிபான் தீவிரவாதிகளுடன், போலீசார் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இதனால் அங்கு கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலை சீர்குலைக்க போவதாகா தாலிபான் தீவிரவாதிகள், நேரடியாக மிரட்டல் விடுத்தனர். இதை தொடர்ந்து அதிபர் ஹமித் கர்சாய் வீடு, போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை ராக்கெட்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான்கு தாலிபான் தீவிரவாதிகள் தலைநகர் காபூலில் இருக்கும் காபூல் மத்திய வங்கிக்குள் நுழைந்துள்ளனர். இந்த தகவலை உடனடியாக அறிந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்துனர்.
இதையடுத்து போலீசாருக்கும், தாலிபான்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. அந்த பக்கம் துப்பாக்கிகள் தோட்டாவை உமிழும் சத்தம் ஓயாமல் கேட்பதாக வழிபோக்கர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். இந்த வங்கி, காபூல் மார்கெட்டுக்கு வெகு அருகில் இருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளையர்களாக இருக்கலாம்...
இது குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ஜிமேரி பஷாரி கூறுகையில், அவர்கள் தாலிபான்களாக இருக்க முடியாது. அவர்கள் திருடர்கள் அல்லது கொள்ளையர்களாக இருக்கலாம் என நினைக்கிறோம். எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றார்.
மேலும் 20 தீவிரவாதிகள்....
ஆனால், வங்கிக்குள் இருப்பவர்கள் தாலிபான் தீவிரவாதிகள் என்று அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், காபூல் நகருக்குள் 20 தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். அவர்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள்.
வங்கியில் இருப்பவர்களும் தாலிபான்களே. அவர்களது தாக்குதலில் பல போலீசார்கள் பலியாகிவிட்டனர் என்றார்.