ஜஸ்வந்த் சிங் நூலுக்கு குஜராத் அரசு தடை
சிம்லா: ஜஸ்வந்த் சிங் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை குறித்து எழுதிய நூலுக்கு குஜராத் பாஜக அரசு தடை விதித்துள்ளது. இதை ஜஸ்வந்த் சிங் கடுமையாக கண்டித்துள்ளார்.
Jinnah- India, Partition, Independence- என்ற பெயரில் ஜஸ்வந்த் சிங் எழுதியுள்ள நூல் பாஜகவுக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நூலில் ஜின்னாவை சரமாரியாக பாராட்டித் தள்ளியுள்ளார் ஜஸவந்த். இதையடுத்து அவரை கட்சியை விட்டு நேற்று தூக்கி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜஸ்வந்த் சிங், புத்தகம் எழுதியது தப்பா என்று வேதனை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் அடுத்த அடியாக, ஜஸ்வந்த் சிங் நூலுக்கு குஜராத் மாநில பாஜக அரசு தடை விதித்துள்ளது. நேற்று இரவு இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து குஜராத் மாநில அரசு விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சர் என்ற பெருமைக்குரிய சர்தார் வல்லபாய் படேலை அவமதிக்கும் வகையில் இந்த நூலில் கருத்துக்கள் உள்ளன. அவரது தேசியப் பற்றை கேள்வி கேட்பது என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாதது.
படேலின் நற்பெயருக்கும், அவரது தேசப்பற்றுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த நூல் உள்ளது. நவீன ஐக்கிய இந்தியாவை கட்டி எழுப்பிய சிற்பி அவர். அப்படிப்பட்டவரை திரிபான வரலாற்றைக் கூறி அவமதிக்க முயல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே இந்த நூலை தடை செய்ய மாநில அரசு முடிவெடுத்தது. உடனடியாக இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த நூலை விற்பனை செய்யவோ அல்லது அதிலிருந்து நகல் எடுத்து விநியோகிப்பதோ குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை குறித்து ஜஸ்வந்த் சிங் கருத்து தெரிவிக்கையில், சல்மான் ருஷ்டியின் நிலையில் நான் இருக்கிறேன். அவர் எழுதிய சாத்தானிக் வெர்சஸ் நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது போல எனது நூலுக்கும் தடை விதித்துள்ளனர்.
புத்தகத்தை நாம் எப்போது தடை செய்ய ஆரம்பிக்கிறோமோ அப்போதே சிந்தனையையும் நாம் தடை செய்ய ஆரம்பித்து விட்டோம் என்றுதான் அர்த்தம்.
சல்மான் ருஷ்டி மீது அன்று நடவடிக்கை எடுத்தது போல இன்று என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது குஜராத் அரசு.
என்னை ஏன் நீக்கினார்கள் என்பதற்குரிய காரணத்தை இதுவரை ஒருவரும் தெளிவாக சொல்லவில்லை. அதை அவர்கள் முதலில் சொல்ல வேண்டும்.
நான் டார்ஜீலிங் மக்களால் லோக்சபாவுக்கு அனுப்பப்பட்டவன். நான் நீக்கப்பட்டதும் அங்கிருந்து பலரும் எனக்கு போன் செய்து எம்.பி. பதவியிலிருந்து விலகக் கூடாது என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றார்.