காசு கொடுத்து ஓட்டு வாங்கிய காங். காமராஜர் ஆட்சி பற்றிப் பேசலாமா? கொ.மு.க.
சென்னை: தொண்டாமுத்தூரில் வாக்காளர்களுக்கு காங்கிரஸார் காசு கொடுத்து ஓட்டுக்களை வாங்கியுள்ளனர். அப்படிப்பட்ட காங்கிரஸார் காமராஜர் ஆட்சி குறித்தெல்லாம் பேசக் கூடாது என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ஈஸ்வரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில்,
தற்போது, நடந்த இடைத்தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் நான் போட்டியிட்டேன். தேர்தல் தேதி அறிவிப்பு வந்த நாளில் இருந்து ஆளும் கட்சியினர் எங்களை பிரசாரம் செய்ய விடவில்லை. பணம் கொடுத்தவர்களை கையும் களவுமாக பிடித்து கொடுத்தால், எங்கள் கட்சியினர் மீதே போலீசார் வழக்கு போடுகிறார்கள்.
ஒளிவு மறைவு இல்லாமல் பணம் கொடுப்பதை தடுக்க முடியாத ஓர் தேர்தல் ஆணையம் தேவைதானா?. தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கடமை தவறிவிட்டாரே?. பணம் கொடுப்பதை தடுக்க தன்னால் முடியவில்லை என்றால் வேறு பதவிக்கு அவர் சென்று விடலாம்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் காசு கொடுத்து ஓட்டு வாங்கிய காங்கிரஸ்காரர்கள் இனிமேல் காமராஜர் ஆட்சி பற்றி பேசக்கூடாது.
கொங்குநாட்டு பிரச்சினைகளை அரசு கவனத்திற்கு கொண்டுவர, கொங்குநாடு முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. கொங்கு நாட்டில் சாயக்கழிவுதான் மிகப் பெரிய பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
தற்போது, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சாயக்கழிவு பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பேசி, நிதி உதவி கேட்டுள்ளனர். இதனால், சாயக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது. இதற்காக மு.க.ஸ்டாலின், தயாநிதிமாறன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் ஈஸ்வரன்.