அல் கொய்தா தலைவர்களைக் கொல்ல தனியாரை நாடிய புஷ் அரசு
2001ல் இந்தத் திட்டத்தை பேச ஆரம்பித்து 2004 வரை ரகசியமாக மேற்கொண்டிருந்தது சிஐஏ. இருப்பினும் இந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டு விட்டதாம்.
பிளாக்வாட்டர் யுஎஸ்ஏ என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைத்தான் அல் கொய்தா தலைவர்களைக் கொல்லும் பணிக்காக வாடகைக்கு அமர்த்த தீர்மானித்தது. ஏற்கனவே இந்த நிறுவனம் ஈராக்கில் செயல்பட்டு வந்த விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது புஷ் அரசு, இந்த நிறுவனத்தை வைத்து அல் கொய்தா தலைவர்களைக் கொல்ல முயன்றதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட் ஆகிய இரு தினசரிகளும் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளன.
வடக்கு கரோலினாவைச் சேர்ந்த நிறுவனம்தான் பிளாக்வாட்டர் யுஎஸ்ஏ. இந்த நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்திய சிஐஏ ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதங்களுக்காக பல கோடி பணத்தை காண்டிராக்டாக பேசியுள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் இது ரத்தாகி விட்டதாம்.
2001ல் இந்த ரகசியத் திட்டத்தை தீட்டியுள்ளது சிஐஏ. அல் கொய்தா தலைவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வரும் பொறுப்பை தனியாரிடம் விடுவது என்ற முடிவெடுக்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டத்தை பிளாக்வாட்டர் நிறுவனத்திடம் கொடுக்க முடிவானது.
இவர்களுக்கு உதவியாக அமெரிக்க ராணுவத்தின் புற ராணுவப் படையினர் இருப்பார்கள் என்றும் பேசப்பட்டது. கொய்தா தலைவர்களைப் பிடிக்கும் அல்லது கொல்லும் முயற்சியின்போது பிரச்சினை ஏற்பட்டால் அமெரிக்க அரசு பிளாக்வாட்டர் நிறுவனத்திற்கு முழுப் பாதுகாப்பாக இருக்கும் என்றும் பேசப்பட்டதாம்.
இருப்பினும் 2004ம் ஆண்டுவாக்கில் இந்தத் திட்டத்தை திடீரென சிஐஏ கைவிட்டு விட்டதாம்.