ஆஸி. விமானத்துக்கு மும்பையில் மிரட்டல்-மும்பை கால் சென்டருக்கு போன்
மெல்போர்ன்: மெல்போர்ன் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மும்பையில் உள்ள கால் சென்டருக்கு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எஸ்.கியூ 227 என்ற அந்த விமானத்தில் 198 பயணிகளும், 20 ஊழியர்களும் இருந்தனர். இந்த விமானம் இன்று மெல்போர்னை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறி மும்பையில் உள்ள ஒரு கால் சென்டருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
இதையடுத்து மெல்போர்ன் விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. மேலும் விமானத்தின் விமானிக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து விமான ஊழியர்கள், பயணிகளிடம் இதைத் தெரிவித்தனர். இதனால் விமானத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அதன் பின்னர் ஊழியர்கள் விமானம் முழுவதையும் சோதனையிட்டபோது அதில் குண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர்.
பின்னர் விமானம் மெல்போர்ன் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் மீண்டும் விமானம் முழுமையாக சோதனையிடப்பட்டது. அப்போது வெடிகுண்டு இல்லை, அது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது.
மிரட்டல் எங்கிருந்து வந்தது, விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.