அணுமின் நிலையங்களில் அந்நிய முதலீடு அனுமதியில்லை!
நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கத் துவங்கிவிட்டது. முதல் கட்டமாக சமீபத்தில் 10 நிறுவனங்களுக்கு அணனுமதியும் அளித்துள்ளது.
இந்த நிலையில் அணுசக்தித் துறையிலும் 49 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அணு சக்தி தொடர்பான சட்டத்தையே மாற்றப் போகிறார்களாம்.
இதுகுறித்து இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் அனில் ககோட்கரிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர் கூறியுள்ளதாவது:
இந்திய அணுமின் நிலையங்களில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது கூடாது.
ஆனால் அணுமின் நிலையங்களுக்கான பொருட்கள் தயாரிப்பு மற்றும் கட்டமைப்பில் தனியாரை குறிப்பிட்ட அளவு மட்டும் அனுமதிக்கலாம். தோரியத்தை மையமாக கொண்டு செயல்படும், அணு உலைகளை வடிவமைத்து உருவாக்குவதில், நம் நாட்டிற்கு தனித்திறமை உள்ளது.
வரும் காலத்தில் இந்தியாவை, உலகளவிலான அணு தொழில் நுட்பத்தில் தலைச் சிறந்த நாடாக மாற்ற இந்த நிபுணத்துவம் உதவும்.
இந்தியாவில், தற்போது அணுமின் நிலையங்கள் மூலம் 4,120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் 2012ம் ஆண்டில் இது 10 ஆயிரம் மெகாவாட் ஆக அதிகரிக்கப்படும், என்றார் அவர்.