ஜஸ்வந்த் புத்தகம்: தடையை விலக்க சிபிஐ கோரிக்கை
டெல்லி: ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்துக்கு குஜராத் மாநில பாஜக அரசு விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் எழுதிய நூல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் ஜின்னாவை பாராட்டி எழுதியதை அடுத்து பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும், அந்த நூலில் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்டும் சர்தார் வல்லபாய் படேலை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதையடுத்து குஜராத் மாநில பாஜக அரசு அவரது புத்தக விற்பனையை தடை செய்தது.
இந்நிலையில் புத்தகத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் மத்திய செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில்,
ஜஸ்வந்த் சிங் புத்தகம் தடை செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரான முடிவு.
ஜஸ்வந்த் சிங் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், ஒரு ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தங்களது கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது. தேசத்தின் நலனுக்கு எதிராக இல்லாத வகையில் யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
பாஜகவை பிடித்த கிரகணம் ஆர்எஸ்எஸ்...
இந்த தடை நடவடிக்கை மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கையை பாஜகவினால் எடுக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் ஆர்எஸ்எஸ் சூரியனை பிடித்திருக்கும் கிரகணத்தை போல் பாஜகவை முழுமையாக மறைத்து வருகிறது என தெரிவித்துள்ளது.