நேருவின் நிர்பந்தத்தால் தான் ஆர்எஸ்எஸ்சுக்கு படேல் தடை விதித்தார்: அத்வானி
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் தனது புத்தகத்தில் ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகளை சர்தார் படேல் ஏற்கவில்லை. அதனால் தான் அதை தடை செய்தார் என்று கூறியுள்ளார்.
பாஜக தேர்தல் தோல்வி குறித்து சிம்லாவில் நடந்த அக் கட்சியின் ஆய்வுக் கூட்டத்தின் கடைசி நாளான இன்று பேசிய அத்வானி பேசியது குறித்து அக் கட்சியின் செய்தித் தொடர்பாளக் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:
ஆர்எஸ்எஸ்சுக்கு படேல் தடை விதிக்க நேரு தான் காரணம். அவர் தான் படேலை நிர்பந்தித்து தடை விதிக்க வைத்தார். இதையடுத்து நேருக்கு படேல் எழுதிய கடிதத்தி்ல், ஆர்எஸ்எஸ்சுக்கு தடை விதி்த்து தவறு என்று கூறியுள்ளார்.
மேலும் 700 மாகாணங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்தவர் படேல். அவரை சிறுமைப்படுத்த ஜஸ்வந்த் சிங் முயன்றுள்ளார்.
ஜஸ்வந்த்தை கட்சியை விட்டு நீக்கியது மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால், அவர் எழுதியவை பாஜகவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறானவை. இதனால் அவரை நீக்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
காங்கிரஸை ஒடுக்க வேண்டுமானால் கூட்டணி அரசியல் மிகவும் அவசியம். கடந்த சில ஆண்டுகளாக கட்சி தொடர்ந்து தேய்ந்து வருவது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று அத்வானி கூறியதாக சுஷ்மா சுவராஜ் கூறினார்.
தேர்தல் தோல்வி குறித்து கூட்டப்பட்ட இக் கூட்டத்தில் தோல்விக்கு காரணமானவர்கள் என்று குறிப்படுவோர் அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.
ஜஸ்வந்த் சிங்கை கட்சியை விட்டு நீக்கி அதை தேசிய அளவில் பெரிய செய்தியாக்கிவிட்டுக் கமுக்கமாக'க் கலைந்துவிட்டனர் பாஜக தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.