இடைத் தேர்தல் முறையாக நடக்கவில்லை-பாஜக
திருச்சி: தமிழகத்தில் இடைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறினார்.
திருச்சியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் நடந்து வரும் சில சம்பவங்களை பார்க்கும்போது தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பது தெரிகிறது. எனவே தமிழ்நாடு பாதுகாப்பாக இருப்பதாக கருதி தமிழக அரசு மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.
பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்ட விஷயம் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும், கட்சியில் எவ்வளவு மூத்தவராக இருந்தாலும் பாஜக நடவடிக்கை எடுக்க தயங்காது என்பதையே காட்டுகிறது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே பிரச்சனை சுமூகமாக தீர்ந்துவிடும்.
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக விடுத்த வேண்டுகோளுக்கு மக்கள் செவிசாய்க்கவில்லை என்பதை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது என்று கூறுகிறது. முறையாக நடந்தது என்று நாம் அதை எடுத்துக் கொள்ள முடியாது.
கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். இதற்காக நான் 2 மாநில முதல்வர்களுக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். பேச்சு வார்த்தைகள் மூலம் எந்த பிரச்சினையையும் தீர்த்து கொள்ள முடியும் என்பதை இது காட்டுகிறது என்றார்.
தமிழகத்தில் பாஜகவின் மக்களவைத் தேர்தல் தோல்விக்கு வலுவான தலைமை இல்லாததே காரணம் என அக் கட்சியின் தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆப்தே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.