300 மூத்த அலுவலர்களை நீக்கும் அக்சென்சர்!
பிரபல சர்வதேச அவுட்ஸோர்ஸிங் மற்றும் நிர்வாக ஆலோசனை நிறுவனம் அக்சென்சர் தனது மூத்த நிர்வாக அலுவலர்களை 7 சதவிகிதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளது.
வருகிற நான்காம் காலாண்டில் இந்நிறுவனத்தின் மறுசீரமைப்புச் செலவு 247 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த செலவை சமாளிக்க இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது அக்சென்சர்.
மேலும் உலகம் முழுக்க உள்ள தங்கள் அலுவலகங்களின் தேவையற்ற பகுதிகளை பயன்பாட்டிலிருந்து விலக்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 119 மில்லியன் டாலர் மிச்சப்படுத்தப்படுத்தப்படும்.
மூத்த நிர்வாக அலுவலர்களை நீக்குவதன் மூலம் மீதித் தொகையை சரிகட்ட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டப்படி, உலகம் முழுக்க உள்ள இந்நிறுவனக் கிளைகளிலிருந்து 300 மூத்த ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள்.
வரும் 2010-க்குள் பணியாளர் நீக்கத்தை படிப்படியாக அமலாக்க நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக அக்சென்சர் சிஇஓ வில்லியம் கிரீன் தெரிவித்துள்ளார்.
அக்சென்சரில் இன்றைய தேதிக்கு 1,77,000 ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 4800 பேர் மூத்த நிர்வாக அலுவலர்கள்.