கர்நாடக இடைத் தேர்தல்-அமைச்சர் தோல்வி
டெல்லி: கர்நாடகத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக இரண்டு இடங்களிலும், தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் இரு இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
இதில், பெங்களூர் கோவிந்தராஜ நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த சோமண்ணா, சென்னபட்டணா தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த யோகேஷ்வர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால் அந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது.
இந்தத் தொகுதிகளுக்கு கடந்த கடந்த 18ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாயின.
இதில் காங்கிரசிலிருந்து பாஜகவுக்குத் தாவி அமைச்சரும் ஆன சோமண்ணா அதிர்ச்சி தோல்வியடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 25 வயது இளைஞரான காங்கிரஸ் வேட்பாளர் பிரியா கிருஷ்ணா வெற்றி பெற்றார். இதன்மூலம் சோமண்ணா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சித்தாபுரா, கொள்ளேகால் ஆகிய தொகுதிகளில் பாஜகவும், ராமநகரம், சென்னபட்டணா தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இடங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.
இந் நிலையில் தேர்தலில் தோல்வியடைந்த அமைச்சர் சோமண்ணாவை முதல்வர் எதியூரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மே.வங்கம்-2 தொகுதிகளிலும் திரிணமூல் வெற்றி:
இந் நிலையில் மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
சியால்டா தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரையும், பெப்பஜார் தொகுதியில் இடதுசாரிகள் ஆதரவுடன் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரையும் அக் கட்சி வீழ்த்தியது.
உ.பி.யில் பகுஜன் சமாஜ் வெற்றி:
உத்தரப் பிரதேசத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளில் 3ல் பகுஜன் சமாஜ் கட்சி வென்றுள்ளது. மலிஹாபாத், பிதுனா, மேற்கு மொராதாபாத் தொகுதிகளில் அக் கட்சி கைப்பற்றியுள்ளது.
மோரேனா தொகுதியில் அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளம் வென்றுள்ளது.
இந்த 4 இடங்களிலும் பாஜக, காஙகிரசுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது.