தமிழக அரசின் கெடுபிடியால் கேரள அரசுக்கு வருவாய் அதிகரிப்பு!
செங்கோட்டை: தமிழக அரசின் அதிரடி சோதனை கெடிபிடிகளால் கேரள அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.
இது குறித்து கேரள மாநிலத்தின் முன்னணி நாளிதழான மலையாள மனோரமா வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தின் வழியாக அண்டை மாநிலமான கேரள மாநிலத்திற்கு நெல்லை மாவட்டம் புளியரை, நாகர்கோவில் மாவட்டம் அமரவிளை சோதனை சாவடிகள் வழியாக மணல், குண்டுக்கல், சிமிண்ட், கல்பவுடர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. எரிசாரய கடத்தலும் நடைபெற்று வந்தது.
இதனை முற்றிலும் ஓழிக்கும் விதமாக தமிழக அரசு அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கி குமரி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளும், நெல்லை மாவட்டம் செங்கோட்டை புளியரை பகுதியில் 5க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளும் அமைத்து தீவிர சோதனை மேற்கொண்டது.
இதனால் ஆரியங்காவு, அமரவிளை செக்போஸ்ட் வழியாக கடத்தப்பட்டு வந்த எரிசாராயம், பாறைபவுடர், சிப்ஸ், போன்றவைகளும், தமிழகத்தில் ரேசனில் வழங்கப்படும் 1 ரூபாய் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற கடத்தல்களுக்கு கேரள ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பிண்ணணியில் இருந்து வருகின்றனர். ஆரியங்காவு சோதனை சாவடியில் அதிநவீன ஸ்கேனர் கருவி வைக்கவும் அவர்கள் தடையாக இருந்து வருகின்றனர்.
கேரள அரசின் கமர்ஷியல் வரியை ஏமாற்றும் விதமாக சிமிண்ட், அரிசி, ஆடு மாடுகள் போன்றவற்றை கேரள அரசு வணிக வரி அதிகாரிகள் துணையோடு கடத்தல் செய்துள்ளனர்.
இந் நிலையில் தமிழக அரசு சோதனைச் சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அதிக பணியாளர்களை அமர்த்தி சோதனைகளை கூடுதலாக்கியதால் கேரள மாநிலத்திற்குள் ஆரியங்காவு, அமரவிளை வழியாக கடத்தல் நடைபெறுவது தடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக எல்லை சோதனை சாவடிகளில் தீவிரமாக சோதனை நடத்தி வரி முறையாக வசூல் நடப்பதால் கேரளாவிலும் அதை பின்பற்றி வரி வசூல் செய்யப்படுகிறது.
தமிழக அரசின் முறையான சோதனையால் கேரள அரசுக்கு அதிகளவு வருவாய் அதிகரித்துள்ளது என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.