நாளை விநாயகர் சதுர்த்தி-தமிழகத்தி்ல் கோலாகலம்
சென்னையில் 735 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா ஆகியவை இந்த சிலைகளை வைக்கவுள்ளனர்.
இந்த சிலைகளுக்கு ஒருவார காலம் வரை பூஜைகள் நடைபெறும். அதன் பிறகே இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும்.
இந்த சிலைகள் 11 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இந்த சிலைகளுக்கு நாளை முதல் 30ம் தேதி வரை 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
களிமண் மற்றும் நச்சுத்தன்மையற்ற பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பூஜைக்காக வைக்க வேண்டும், கடலில் கரைக்க வேண்டும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வரும் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். சென்னையில் பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் ஒண்டிகுப்பம், பாப்புலர் எடைமேடை பின்புறம், திருவொற்றியூர் கார்போரன் டம் பின்புறம், நீலாங்கரை பல்கலை நகர் ஆகிய 5 இடங்களில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஊர்வலத்தின்போது பட்டாசுகளை வெடிக்கக்கூடாது, பொதுமக்கள் மீது வண்ணப்பொடிகளை தூவக்கூடாது. போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதே போல மும்பை உள்பட நாடு முழுவதுமே விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
பழனி கோவிலில் வெடி மருந்து..
இதற்கிடையே பழனி அருகே விநாயகர் கோவிலுக்குள் வெடி மருந்துகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனி மலையடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவிலில் ஐஸ்க்ரீம் டப்பாவுக்குள் வெடி மருந்துகள் திணிக்கப்பட்டு அவை கோவிலுக்குள் வீசப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.