தமிழகத்தில் மீண்டும் சிக்குன்குனியா பரவுகிறது
இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை 3 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு தமிழக மக்களை வாட்டி வதைத்த சிக்குன்குனியா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
சிக்குன்குனியா வந்து கை, கால்கள் முடக்கப்பட்டு, உடல் வலி, அசதி என மக்கள் பெரும் அவதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் நோய் இது.
தற்போது இந்த சிக்குன்குனியா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது. தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிக்குன்குனியா பரவி வருகிறது.
சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற வருகிறார்கள்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஊசி போடும் அறை ஒன்று தான் உள்ளது. இதனால் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து இருந்து ஊசி போட்டு செல்கிறார்கள்.
உடனடியாக தேன்கனிக்கோட்டை பகுதிக்கு மருத்துவக் குழுவை அரசு அனுப்பி வைத்து ஆரம்பத்திலேயே சிக்குன்குனியா பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ராட்சத கொசுக்கள் காட்டுப் பகுதியிலிருந்து பெருமளவில் வருவதாகவும், அவற்றை வீரியம் மிக்க மருந்துகளை அடித்து ஒழிக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு சிக்குன்குனியா வந்து வேகமாக பரவிய நிலையிலும், அரசு ஆரம்பத்தில் சுதாரிக்கவில்லை. பின்னர் பாதிப்பு பெருமளவில் உயரத் தொடங்கியபோதுதான் விழித்தெழுந்து நடவடிக்கைகளில் குதித்தது.
தற்போது பன்றிக் காய்ச்சல் வேறு பரவிக் கொண்டிருப்பதால் மக்கள் சிக்குன்குனியாவில் சிக்கி விடாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.