கோவை-மதுரையில் பருத்தி விற்பனை மையங்கள்: தயாநிதி மாறன்
கோயம்புத்தூரில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சைமா) பிளாடினம் ஜூப்ளி விழா நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறன் கலந்து கொண்டு பேசியதாவது ..
பருத்தி விற்பனை நிலையங்கள், குஜராத், மகாராஷ்டிரா போன்ற பருத்தி விளையும் மாநிலங்களில் இருந்து வரும் பருத்தியை உள்ளூர் ஆலைகளுக்கு விற்பனை செய்யும்.
இதனால் நூற்பாலைகள் தமது ஊரிலேயே தரமான பருத்தியை கொள்முதல் செய்ய முடியும்.
இந்த நடவடிக்கையால் நூற்பாலைகள் நூல் விலையை ஒரு கிலோவிற்கு ரூ 2 வீதம் குறைக்க முடியும். இதனால் நூற்பாலைகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்னைகளை சரி செய்து விடலாம்.
இந்திய சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்ப ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்கு, தரநிலைகளை அதிகரிப்பது, உற்பத்தித் திறனை கூட்டுவது, மாற்று தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஆகியவை உடனடியாக தேவைப்படுகிறது.
இதனை அடைவதற்காக மெடி டெக் எனப்படும் கருத்தரங்கு அடுத்த மாதம் 1ம் தேதியன்றும், புரோ டெக் செப்டம்பர் மாதம் 15 ம் தேதியன்றும், அக்ரோ டெக் செப்டம்பர் 18 அன்றும், ஜியோ டெக் செப்டம்பர் 23 ம் தேதியன்றும், மொத்தம் 4 கருத்தரங்குகள் புதுடெல்லியில் நடைபெற உள்ளது என்றார்.