பிகாரில் ராகுல் காந்தி பெயரில் போலி லைசென்ஸ்
பாட்னா: பிகாரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒன்றில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பெயரில் வேறு ஒருவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குளறுபடி எல்லாம் பிகார் மாநிலம், சரன் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்துள்ளது.
இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில்,
1847/09 என்ற எண் கொண்ட டிரைவிங் லைசென்ஸ் ஒன்று ராகுல் காந்தி பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் தந்தையின் பெயர் என்று மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரும், நிரந்தர வீட்டு முகவரியாக சன்சத் பவன் மார்க் (நாடாளுமன்றம் இருக்கும் தெரு), டெல்லி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்பு முகவரியாக சரன் மாவட்ட நீதிபதியின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த லைசென்சில் புனிதா ஸ்ரீவ்ஸதவா என்று வட்டார அலுவலரின் பெயரும், முத்திரையும் குத்தப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு மே 18ம் தேதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அரசு அலுவலகங்களில் அதுவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கும், காசு கொடுத்தால் இந்தியாவில் எதையும் செய்யாமல் என்பதற்கும் இதை விட வேறு நல்ல சாட்சி தேவையில்லை.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை வட்டார போக்குவரத்து அலுவலர் ஸ்ரீவஸ்தவா ஒரேடியாக மறுத்துவிட்டார்.
அவர் கூறுகையில், இது போலி லைசென்ஸ். இதிலிருக்கும் கையெழுத்து, முத்திரை அனைத்தும் போலியானது. எனது பெயரை கெடுக்க இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
இப்படி பிரபலங்களின் பெயரில் போலி லைசென்ஸ் வாங்குவது இந்தியாவில் முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 1990ல் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரில் பிகாரில் ஒரு லைசென்ஸ் பெறப்பட்டது.