ஜஸ்வந்த் புத்தகத்திற்கு தடை கோரும் பாஜக
சென்னை: ஜஸ்வந்த் சிங் எழுதிய ஜி்ன்னா குறித்த புத்தகத்திற்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மூத்த பாஜக தலைவரான வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
புத்தகம் எழுதுவது ஜஸ்வந்த் சிங்கின் உரிமை. ஆனால் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக அவர் எழுதியது தான் தவறு. 30 ஆண்டுகளுக்கு மேல் கட்சியில் இருந்த அவரை நீக்கியது மிகவும் வேதனையான முடிவு. எனினும், கட்சி கொள்கைகளுக்கு எதிராக எழுதியதால், அதைத் தவிர வேறு வழியே இல்லை.
இந்தப் புத்தம் விஷயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. சல்மான் ருஷ்டி எழுதிய புத்தகத்துக்கு காங்கிரஸ் அரசு தடை விதித்தது. ஆனால், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் பற்றி அவதூறாக எழுதப்பட்ட புத்தகத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கிறது. ஆனால், தடை விதிக்க மறுக்கிறது.. ஏன்?. இந்தப் புத்தகத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் நடக்கும் தேர்தல்கள் சந்தேகத்துக்கிடமானதாகிவிட்டன. 5 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது தவறு. இது போன்ற பிரச்சனைகளுக்கு தேர்தல் புறக்கணிப்பு சரியான தீர்வாகாது. அவர்கள் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும்.
மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் தவறு நடக்க வாய்ப்புகள் உள்ளது. அது எந்திரம் தானே, அதில் ஏன் தவறு செய்ய முடியாது?. பழைய வாக்கு சீட்டு முறையே சிறந்தது. அது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
ஜஸ்வந்த் சிங்கின் புத்தகத்துக்கு குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடி தடை விதித்துள்ளார். ஆனால், புத்தகத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கர்நாடக பாஜக முதல்வர் எதியூரப்பா கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தான் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என நாயுடு கோரியுள்ளார்.