குடித்துக் கொண்டே குறி சொல்லும் பெண்ணின் ஆசிரமத்திற்கு சீல் வைப்பு!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், ஆசிரமம் அமைத்து, கருப்பசாமி தன் மீது வந்து அருள் வாக்கு கூறுவதாக கூறிக் கொண்டு சுதா என்பவர் குறி சொல்லி வந்தார். அவருக்குத் துணையாக தந்தை துரையும் இருந்தார்.
சுதா குறி சொல்லும் பாணியே தனி. சாதாரணமாக அவர் குறி சொல்ல மாட்டார். மது அருந்திக் கொண்டும், புகை பிடித்தபடியும்தான் அவர் குறி சொல்வது வழக்கம்.
குறி கேட்க வருபவர்கள் பூ, பழம் ஆகியவற்றுக்குப் பதில் குவார்ட்டர், ஆஃப், ஃபுல் என மது பாட்டில்களோடும், சுருட்டுப் பாக்கெட்டுகளுடனும்தான் வர வேண்டும்.
அவர்கள் தருகி மதுபானங்களை, அப்படியே ராவாக அடித்துக் கொண்டே குறி சொல்வார் சுதா.
இப்படியாக குறி சொல்லி பிழைப்பு நடத்தி வந்த சுதா மற்றும் அவரது தந்தை துரை ஆகியோரை 2 நாட்களுக்கு முன்பு போலீஸார் பண மோசடி புகார் தொடர்பாக கைது செய்தனர். இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சுதாவிடம் பணத்தைப் பறி கொடுத்து ஏமாந்தவர்களின் பட்டியலை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையே சுதாவின் ஆசிரமத்தை போலீஸார் இன்று பூட்டி சீல் வைத்தனர். அப்போது ஆசிரமத்திற்குள் இருந்த மேசை, நாற்காலி, பூசைப் பொருட்களை சுதாவின் உதவியாளர்கள் எடுத்துக் கொண்டு சென்றனர்.