அத்வானி மீது கோவிந்தாச்சாரியா தாக்கு!
அவர் கூறுகையில்,
தான் எழுதிய புத்தகத்தில் பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் என்பதற்காகவோ அல்லது சர்தார் படேலை விமர்சித்துள்ளார் என்பதற்காகவோ ஜஸ்வந்த் சிங்கை பாஜக மேலிடம் கட்சியை விட்டு நீக்கியுள்ளது. அவரை இப்படி எந்த விளக்கத்தையும் கேட்காமல் நீக்கியது முறையானதாகத் தெரியவில்லை.
அந்த புத்தகத்தை கட்சி மேலிடத் தலைவர்கள் முதலில் நன்கு படித்துப் பார்த்திருக்கலாம். அதன் பின்னர் விளக்கம் கேட்டிருக்கலாம்.
ஜஸ்வந்த் சிங்கை நீக்கிய விதத்தை பார்த்தால் அது ஒரு தேசிய கட்சிக்கு உகந்ததாக இல்லை.
ஜஸ்வந்த் சிங் தனது புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறார் என்பதை கட்சியின் அறிவாளிகள் படித்துப் பார்த்திருக்கலாம். படித்துப் பார்க்கவாவது அவகாசம் எடுத்திருக்கலாம்.
மாறாக, அவசர அவசரமாக வெளியேற்றியது வெறுக்கத்தக்க செயல். ஒரு கப் காபி சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்படக் கூடிய முடிவா இது?
யாரும் புத்தகம் எழுதலாம். அது ஜனநாயக உரிமை. ஜின்னாவை புகழ்ந்துள்ளார் என்பதற்காக ஜஸ்வந்த் நீக்கப்பட்டாரா அல்லது சர்தார் பட்டேலை விமர்சித்தார் என்பதற்காகவா என்பது புரியவில்லை.
ஜின்னாவை புகழ்ந்துள்ளார் என்று காரணம் காட்டி ஜஸ்வந்த்தை விலக்கியதாக கூறாமல் படேலை விமர்சித்தார் என்பதை முன்வைத்து ஜஸ்வந்த் நீக்கத்தை மழுப்புகிறார்கள். ஏனென்றால் ஜின்னாவை இழுத்தால் வேறு சிலரும் (அத்வானி) மாட்டுவார்கள் என்ற கட்சியின் மூத்த தலைவர்கள் பயப்படுகிறார்கள்.
ஜின்னா பற்றிய விவாதமே தேவையற்றது என்று தோன்றுகிறது. அவர் மதச்சார்பற்றவரும் இல்லை, மதவாதியும் இல்லை. அவர் கடவுள் மறுப்புக் கொள்கைவாதி. அவர் மது அருந்துவார். அது இஸ்லாத்துக்கு எதிரானது.
பிரிவினையின்போது லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் ஜின்னாவே பொறுப்பு.
பாஜக கொள்கைகளுக்கு எதிராக ஜஸ்வந்த் செயல்பட்டதாக சொல்கிறார்கள். மத்தியில் பாஜக ஆட்சியின்போது தான் இந்தியாவின் மாமிச ஏற்றுமதி பல மடங்கானது. ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் தான் அதிக அளவில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. இதெல்லாம் பாஜகவுக்கு ஏற்புடைய செயல்களா?
என்றார் கோவிந்தாச்சார்யா.
பாஜக நிலைக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு:
இதற்கிடையே ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகத்துக்கு குஜராத் அரசு தடை விதித்தது ஏற்க முடியாதது என்று பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது.