For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைமை நீதிபதியும் சர்ச்சைகளும்!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் சமீபத்திய கருத்துக்கள் சர்ச்சைகயை கிளப்பியுள்ளன.

நீதிபதிகளும் சொத்துக் கணக்கை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கருத்து நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இதையடுத்து மத்திய அரசு ஒரு சட்ட மசோதாவை தயார் செய்தது.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இது வைக்கப்பட்டது. அதில், நீதிபதிகள் சொத்துக்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யலாம். ஆனால் அவை ரகசியமாகவே வைக்கப்படும், பகிரங்கமாக அறிவிக்கப்பட மாட்டாது என்று இடம் பெற்றிருந்த அம்சத்திற்கு நாடாளுமன்றத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பை எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்தின.

இதையடுத்து மசோதாவைத் தாக்கல் செய்த உடனேயே அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி.

நீதிபதிகள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்வது குறித்த சர்ச்சை தற்போது மீண்டும் வெடித்துள்ளது. இம்முறை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும், தலைமை நீதிபதிக்கும் இடையிலான மோதலாக இது மாறியுள்ளது.

நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை விருப்பப்பட்டால் வெளியிடலாம் என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் கூற அதை கடுமையாக ஆட்சேபித்தார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சைலேந்திர குமார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் சார்பில் பேச கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று அவர் சற்று கடுமையாகவே கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.ஜி.பாலகிருஷ்ணன், சைலேந்திர குமார் ஒரு விளம்பரப் பிரியர். விளம்பரம் தேடிக் கொள்வதற்காக இவ்வாறு பேசியுள்ளார். நீதிபதிகள் இவ்வாறு விளம்பரப் பிரியர்களாக இருக்கக் கூடாது என்று பதிலளித்துள்ளார்.

- சொத்துக் கணக்கு விவகாரம் வெடிக்க முக்கிய காரணமே சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அனுப்பிய ஒரு விளக்கம் கேட்கும் கடிதம்தான்.

அகர்வால் அனுப்பிய கடிதத்தில், 1997ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து நீதிபதிகளும் சேர்ந்து, நீதிபதிகள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யலாம். அப்படி தாக்கல் செய்யப்படும் கணக்கு விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் இன்னும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதா என்பதை அறிய விரும்புகிறேன் என்று கேட்டிருந்தார்.

ஆனால் அகர்வாலின் பதிலுக்கு பதிலளிக்க மறுத்து விட்டார் கே.ஜி.பாலகிருஷ்ணன். இத்தனைக்கும், நீதிபதிகளின் சொத்து விவரங்களை கேட்கவில்லை அகர்வால். நீதிபதிகளாக சேர்ந்து எடுத்த தீர்மானத்தை அவர்கள் இன்னும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்களா என்பதை மட்டுமே அறிய விரும்புவதாக கூறியிருந்தார் அகர்வால். ஆனால் அதற்கே பதிலளிக்கவில்லை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகம், தகவல் அறியும் சட்டத்தின் வரம்புக்குக் கீழ் வருவதை விரும்பவில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணனே தெளிவுபடுத்தியுள்ளார். அதை நிரூபிக்கும் வகையிலேயே அகர்வாலின் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

அதே 1997ம் ஆண்டு மே 7ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்னொரு தீர்மானத்தையும் நிறைவேற்றினர். அதில், நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் வந்தால் அதை சுப்ரீம் கோர்ட்டே விசாரித்து முடிவெடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அன்று முதல் இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது.

அந்த நடைமுறை வந்ததன் பின்னர் சில நீதிபதிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். சிலர் தண்டனை நடவடிக்கையையும் சந்தித்துள்ளனர்.

ஆனால் கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிக்காலத்தில் இந்த நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

- கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து உச்சநீதிமன்றம் அதை விசாரித்தது. விசாரணை முடிவில் பதவி விலகுமாறு சென்னுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சென் விலக மறுத்து விட்டார். இதையடுத்து அவர் மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றுமாறு மத்திய அரசை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

- ஆனால், பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மலா யாதவ் இதேபோன்ற சிக்கலில் மாட்டியபோது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கே.ஜி.பாலகிருஷ்ணன்.

இத்தனைக்கும் செளமித்ரா சென்னை விட மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர் நிர்மலா யாதவ். ஆனால் உச்சநீதிமன்ற விசாரணையின்போதும் அந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையே என்று கண்டறியப்பட்டன.

ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அட்டர்னி ஜெனரலின் கருத்தின் அடிப்படையில் அவர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க வேண்டாம் என சிபிஐக்கு கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

- இன்னொரு சம்பவம் இது. நீதித்துறை நியமனங்கள், வழக்குகளின் தீர்ப்புகளை நிர்ணயிப்பது போன்றவற்றில் புரோக்கர்கள் தலையீடு இருப்பதாக கூறி பஞ்சாப் விஜிலன்ஸ் பிரிவு, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனனிடம் ஒரு ஆண்டுக்கு முன்பு உரிய ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்தது.

ஆனால் இதுகுறித்து உச்சநீதிமன்ற விசாரணைக்கு இதுவரை உத்தரவிடவில்லையாம் கே.ஜி.பாலகிருஷ்ணன்.

பஞ்சாப் விஜிலன்ஸ் பிரிவு தனது அறிக்கையில் இரு நீதிபதிகளுக்கு எதிரான ஆதாரங்கள், தொலைபேசி உரையாடல் பதிவுகள் என வலுவான ஆதாரங்களை இணைத்திருந்தும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந் நிலையி்ல் கே.ஜி.பாலகிருஷ்ணன், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியை, விளம்பரப் பிரியர் என்று விமர்சித்திருப்பது நீதித்துறையில் புயலை வீசும் என தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X