அக். 1 முதல் ரயில்களி்ல் தட்கல் கட்டணம் குறைப்பு
டெல்லி: தட்கல் முறையில் ரயில் டிக்கெட் எடுப்பதற்கான கட்டணக் குறைப்பு அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
2009-2010-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த போது, தட்கல் கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அக்டோபர் 1-ந் தேதி முதல் தட்கல் கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது.
ரயில்வே அமைச்சக உயர் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், அனைத்து வகுப்புகளுக்கும், தட்கல் கட்டணத்தை வரும் அக்டோபர் முதல் தேதியில் இருந்து குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் படி 2-ம் வகுப்புகளுக்கு 10 சதவீதமும், மற்ற வகுப்புகளுக்கு 30 சதவீதமும், அடிப்படை கட்டணத்தில் இருந்து தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. 2-ம் வகுப்புக்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 ஆகும். அதிக பட்சம் ரூ.15.
தூங்கும் மற்றும் குளிர்சாதன அமர்வு வகுப்புகளுக்கு குறைந்த தட்கல் கட்டணம் ரூ.75. அதிக கட்டணம் ரூ.150. குளிர்சாதன 3 மற்றும் 2 டயர்கள், எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு குறைந்த தட்கல் கட்டணம் ரூ.200. அதிக கட்டணம் ரூ.300.
தட்கல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த கட்டண குறைப்பு முக்கிய நேரம் மட்டும் இன்றி அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். பயண தூரத்தை கணக்கில் கொண்டு இந்த தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.
சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள எக்சிகியூடிவ் வகுப்புகளுக்கும் தட்கல் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. தற்போது இருக்கும் மொத்த இருக்கைகளில் 10 சதவீதம் இதற்காக ஒதுக்கப்படும். அதாவது ஒரு பெட்டிக்கு 5 இருக்கைகள் வீதம் ஒதுக்கப்படும்.
தட்கல் டிக்கெட்டுக்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான முறையில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. கடந்த 1-ம் தேதி முதல் தட்கல் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யும் காலம் 5 நாட்களில் இருந்து 2 நாட்களாக ரயில்வே துறை குறைத்து இருக்கிறது.