இலங்கைக்கு ஹெலிகாப்டர்கள்-ஆயுதங்கள் வழங்கினோம்: மத்திய அமைச்சர்
சென்னை: இலங்கையின் தற்காப்புக்காக தான் ஹெலிகாப்டர் போன்ற ஆயுதங்களை வழங்கினோம் என பாதுகாப்பு துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடி கனரக தொழிற்சாலையில் நடந்த விழாவில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் டி-90 பீஷ்மா ரக பீரங்கிகளை கொடியசைத்து வைத்து இந்திய ராணுவத்துக்கு வழங்கினார்.
நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த பீரங்கிகள், விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட 12.7 மிமீ துப்பாக்கிகளை கொண்டது. ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த பீரங்கியை ஆண்டுக்கு 100 என்ற எண்ணிக்கையில் தயாரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இரவில் போரிடும் வகையில் இந்த பீரங்கியில் நவீன கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்றத்துக்கான ரேடியோ கருவிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த பீரங்கிகள் அடுத்த 35 ஆண்டுகள் அதாவது, 2045ம் ஆண்டு வரை திறமையாகச் செயல்பட கூடியது.
விழாவில் பல்லம் ராஜூ பேசுகையில்,
இலங்கையின் தற்காப்புக்காக தான் நாங்கள் ஹெலிகாப்டர் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கினோம். இலங்கையுடன் ஏற்கனவே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இந்த உதவிகள் செய்யப்பட்டது. இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை.
டி-90 பீஷ்மா பீரங்கிகள் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல் கல். உள்நாட்டு தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும். அதிநவீன பீரங்கிகள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.