கணவருடன் மோதல்-விவாகரத்து செய்கிறார் சாரா பாலின்
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி விட்டதால் சாரா பாலினும், அவரது கணவர் டோட்-டும் விவாகரத்து முடிவுக்கு வந்து விட்டனர்.
கணவருடன் கடும் சர்ச்சையில் ஈடுபட்டதால் மன அழுத்தத்திற்கு ஆளானதால்தான் தனது ஆளுநர் பதவியை கடந்த வாரம் சாரா பாலின் ராஜினாமா செய்தார் என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ராஜினாமா அறிவிப்பை சாரா வெளியிட்டபோது அவருடன் கணவர் டோட்டும் உடன் இருந்தார். இருப்பினும் இருவரும் சகஜமாக பேசிக் கொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடவில்லை. மேலும் ராஜினாமா முடிவை அறிவித்த பின்னர் டோட்டும், சாராவும் தனித் தனியாகவே கிளம்பிச் சென்றனர்.
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன்பே தனது திருமண மோதிரத்தை சாரா பாலின் கழற்றி விட்டதாக கூறப்படுகிறது.
சாராவின் சொந்த ஊர் இடாஹோ ஆகும். ஆனால் சமீபத்தில் சாரா பாலின் மோன்டனாவில் இடம் வாங்கியுள்ளார். அங்கு தனது குடும்பத்துடன் இடம் பெயரப் போகிறாராம்.
சாராவின் கணவர் டோட், அலாஸ்காவில் உள்ள எண்ணைக் கிணறுகளில் முன்பு பணியாற்றி வந்தார். தற்போது தனது பழையை பணிக்கேத் திரும்பப் போவதாக அவர் கூறியுள்ளார்.
சாரா பாலின் அடுத்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது அவரது விவாகரத்து குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
சாரா - டோட் மனக் கசப்புக்கு அவர்களது 17 வயது மகள் பிரிஸ்டலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. பிரிஸ்டர் தனது காதலர் லெவியுடன் படு நெருக்கமாக இருந்ததை சாரா, தெரிந்தும் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளார். இதனால் பிரிஸ்டல் கர்ப்பமானார்.
இதையறிந்த டோட் சாரா மீது கோபம் கொண்டார். மேலும், சாராவின் 19 வயது மகனான டிராக், போலி அடையாள அட்டையைக் காட்டி மதுபானம் வாங்கினார். இதனால் சிறைக்குப் போகும் அபாயம் எழுந்தது. இதைத் தவிர்க்க ராணுவத்தில் சேருமாறு அவருக்கு அட்வைஸ் செய்தார் சாரா. இதனாலும் டோட் ஆத்திரமடைந்தார்.
இப்படி பிள்ளைகளை தவறான பாதையில் வழி நடத்தி வருவதாக மனைவி மீது கோபம் கொண்டார் டோட். இதை சாரா விரும்பவில்லை. இவையெல்லாம் சேர்ந்து தற்போது சாரா- டோட் விவாகரத்துக்குக் கொண்டு வந்து விட்டுள்ளது.