ஈவ்டீசிங்-நாகர்கோவிலில் 3 மாணவிகள் விஷம் குடிப்பு
வள்ளியூர்: வள்ளியூர் அருகே ஈவ்டீசிங்கால் மனமுடைந்த 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈவ்டீசிங், ராகிங் போன்ற கொடுமைகளை தடுக்க எவ்வளவோ சட்டங்கள் வந்த போதும் அவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அங்கும் இங்கும் மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.
இந்நிலையில் வள்ளியூர் அருகே கன்னாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று மாணவிகள் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் பள்ளிக்கு போகும் போதும், வரும் போதும் சில மாணவர்கள் அவர்களை கேலி, கிண்டல் செய்துவந்துள்ளதாக தெரிகிறது.
சம்பவத்தன்று அந்த மூன்று மாணவிகளும் டியூசனுக்கு சென்று கொண்டிருந்த போது அவர்களை பின் தொடர்ந்த அந்த மாணவர்கள், அவர்கள் அழகாக இல்லை என கூறி கேலி செய்துள்ளனர். இதனால் அவமானமடைந்த அந்த 3 மாணவிகளும் எலி மருந்தை குடித்து, மயங்கி விழுந்தனர்.
இதைக்கண்ட அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்.
இது குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் பள்ளி மாணவர்கள் சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.